குறுந்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுந்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

நல்கார் நயவாராயினும்...

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.(குறுந்தொகை 60)

பொருள் : சிறிய கூதளச்செடிகள் ஆடும் பெரும் மலை. அங்கு ஒரு பெரிய தேனடையை கண்ட காலில்லாத முடவன், தன் உள்ளங்கையை சிறுகுடைபோல குவித்து (சிறுகுடைக்கு தேனெடுக்கும் கூடை என்றும் பொருள் உண்டாம்) தேனடையை நோக்கி சுட்டி கையினை நக்குவது போல... என் காதலர் என்னை நினைக்கவோ விரும்பவோ செய்யவில்லையெனினும், அவரை பலமுறை கண்டுகொண்டிருப்பதே கூட என் உள்ளத்துக்கு இனியதே.....
***********

 ஜெயமோகனின் குறுந்தொகை குறித்த உரையினை சமீபத்தில் கேட்டேன் [http://www.youtube.com/watch?v=0S-GyhYoA6Q]. பிரமாதமான உரை. அந்த உரையில் பழங்கவிதைகளை வாசிக்க நமக்கு இரண்டு மரபுகள் உண்டு என்கிறார் ஜெ. அசை பிரித்து வாசித்தல், அசை போட்டு வாசித்தல். அசை பிரித்தல் என்பது ஒரு அளவிற்கு இயந்திரத்தனமான வாசிப்பு. கவிதையின் மொழியை, அதை சூழ்ந்திருக்கும் திணை, துறை போன்ற இலக்கண கருவிகளை மட்டும் கொண்டு கவிதையை அணுகுதல். அசை போட்டு வாசித்தல் என்பது கவிதையை வாழ்வினையும் கொண்டு அணுகுதல்... அந்த உரையில் ஜெமோ சொன்ன இன்னொரு கருத்து, சங்க கால கவிஞர்கள் நம்மை விடவும் இயற்கைக்கு இன்னும் அருகில் நின்று எழுதியவர்கள். அதனால் நம் பூக்களையும் மரங்களையும் பறவைகளையும் புரிந்துகொள்ளாமல் கவிதையை முழுவது புரிந்துகொள்ள முடியாது...


***********



 காலை நேசன் இந்த குறுந்தொகை பாடலை கூகுள் ப்ளஸில் பகிர்ந்த போது இதை குறித்து அசை போடலாமா என்று தோன்றியது. இப்பாடலில் வரும் கூதளச்செடியினை பற்றி தேடிய பொழுது இதன் அறிவியல் பெயர் convovulus arvensis என்று தெரிந்தது... அதன் புகைப்படம் : ஆக கூதளச்செடி என்பது வெள்ளை பூக்களை உடைய சிறிய செடி. மலைமுழுதும் இதன் பூக்கள் நிரம்பி மலையே வெள்ளையாக தோன்றும் சித்திரம் உருவாகிறது மனதில்...கூதள் ஆடிய நெடுவரை... மலையே சன்னமாக ஆடுவது போல... பூக்களால் வெள்ளையாய் தோன்றும் மலையில் பெருந்தேனடை தனியாக தெரிகிறது. முடவன் அத்தேனடை இருக்கும் மரத்தின் மீதென்ன அம்மரமிருக்கும் மலையின் மீதுமே ஏற முடியாது... அவன் செய்யக்கூடியதெல்லாம் மலையடிவாரத்தில் இருந்தபடி எட்டா உயரத்தில் சிறு புள்ளியாய் தோன்றும் தேனடையை கையினால் சுட்டி நக்குவது மட்டும் தான். அடையவே முடியாத, காதலிக்கும் இவளது இருப்பையே கூட அறிந்துகொள்ளாத உயரத்தில் நிற்கும் ”நல்குதலும் நயவுதலும்” செய்யா ஒரு ஆளுமையை நோக்கிய காதல் என்பதன் வலி இது.... மரத்தை அல்ல... மரம் இருக்கும் மலையையும் நெருங்கவியலாத முடக்காதல்....

இங்கு ஆண்டாள் நினைவுக்கு வருகிறாள். ஆண்டாளின் கதைக்கு “அரங்கன்” வந்து அவளை ஏற்றுக்கொண்டான் என்பது எத்தனை நாடகத்தனமான முடிவு! கிரேக்க நாடகவியலில் Deux ex machina என்ற கருத்தாக்கம் ஒன்று உண்டு. தோராயமாக “கருவியிலிருந்து கடவுள்” என்று மொழிபெயர்க்கலாம். ஒரு நாடகத்தில் தீர்வே இல்லாத சிக்கல்கள் உருவாகும் பொழுது Crane போன்ற கருவியின் மூலம் “கடவுளர்கள்” மேடைக்கு கொண்டுவரப்படுவர். அவர்கள் ட்ரொய்ங்ங்ங் என்று ஒரு கையசைவில் அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிடுவார்கள்...ஆண்டாள் அரங்கனை சேருவதும் இப்படியான ஒரு deux ex machina தான்.

ஆண்டாள் தன் பாவனைகளை உண்மையென நம்பியவள். மற்ற ஆழ்வார்களுக்கும் ஆண்டாளுக்குமான வேறுபாடு அது தான் என்று படுகிறது. பெரியாழ்வாருக்கும் நம்மாழ்வாருக்கும் கண்ணனின் தாயாவதும் காதலியாவதும் காதலியின் தாயாய் நின்று கண்ணனை பழிப்பதும் எல்லாமே ஒரு பாவனை தான். அவர்கள் வாழ்விற்கும் இந்த பாவனைக்குமான வேறுபாட்டினை அறிந்தே இருந்தனர். ஆனால் ஆண்டாள் அந்த கோட்டை தாண்டி, பாவனையே அவள் என்ற நிலைக்கு சென்றுவிட்டவள்.

ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

என்கிறாள்...பாவனையே வாழ்வான நிலை... இந்நிலையில் ”கடவுள்” இறங்கி வராவிட்டால் அவள் நிலை என்ன?

புராணம் வரலாற்றை போல கொடுமையானது அல்ல. அது கருணை நிறைந்தது... கடவுளை கொணர்ந்து அவளை காப்பாற்றிவிட்டது. நாச்சியார் திருமொழி முழுதுமே கற்பனையெனும் நெடுவரையின் மேல் நின்ற அரங்கனை நோக்கி ஆண்டாள் செய்த ”சுட்டுபு நக்குதல்” தான் என்ற எண்ணம் தோன்றிவிட்டால் அப்பாடல்களின் கொண்டாட்டங்கலெல்லாம் மறைந்து ஒரு சோக இருள் படிந்துவிடுகிறது அதன் வரிகளில்.... 

திங்கள், 25 ஜனவரி, 2010

ஊடற்பொழுதுகள்




குறுந்தொகையில் தலைவன்கள் - தலைவிகளுக்கிடையிலான ஊடற்பொழுதுகளைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன். அத்தனையும் கவித்துவமிக்க உணர்ச்சித் தெறிப்புகள். ஒவ்வொன்றையும் தனித்தனியே நேருக்கு நேர் கண் கொண்டு பார்க்கையில் திடுமென காலமின்மை கைகூடி விடுவது ஓர் உன்னத அனுபவம். உண்மையில் இலக்கிய அனுபவம் என்பது இதுவாகத்தான் இருக்க வேண்டும். அனைத்தும் ஒன்றேயாகி அந்த ஒன்றும் தானேயாகும் தருணங்களில் வாய்க்கும் அற்புத அனுபவம் அது.

இன்றைய வாசிப்பில், ஓர் விசித்திர சிந்தனை எழுந்தது.  இந்நூலில் தலைவி கூற்றென வரும் அத்தனை பாடல்களும் ஏன் ஒரே ஒரு தலைவியின் உணர்வெழுச்சிகளாக இருக்கக் கூடாது? பெண் மனம் இத்தனை கொந்தளிப்புகளுக்கும் ஆட்படக் கூடியது தானில்லையா? அளவிறந்த காதலும், அதன்பாற்பட்ட எதிர்பார்ப்புகளும், அவை நிறைவேறாத ஏமாற்றமும், அது தரும் கோபங்களும், கோபத்தின் எல்லையில் பிரிவும், பிரிவின் நீட்சியில் மீண்டும் பொங்கிப் பெருகும் பிரியங்களும் என காலம் காலமாய் காதலில் பெண் மனம் சுழன்று வரும் பாதை இதுவாகத் தான் இருந்து வருகிறது போலும்.

குறுந்தொகையின் இருவேறு பாடல்கள் இப்பாதையைத் துல்லியமாய்ச் செதுக்குகின்றன.  ஒன்று ஏமாற்றத்தின் விளைவாய் எழும் சீற்றம்..

உள்ளின் உள்ளம் வேமே உள்ளா
திருப்பின்எம் அளவைத் தன்றே வருத்தி
வான்தோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.

-ஔவையார். (குறு. 102)

அவரை நினைத்தால் உள்ளம் வேகின்றது. நினைக்காதிருப்பதும் என்னால் தாங்கக் கூடியதாய் இல்லை. என்னை வருத்தி வானில் தோயுமளவிற்கு வளர்ந்து நிற்கிறது காமம். நான் விரும்பியவர் சிறந்தவர் அல்ல.

வெறும் நான்கு வரிகளில் இத்தனை கோபத்தை, வெறுப்பை, ஆற்றாமையை, தன் துயரத்தின் முழுமையை சொல்லி விட முடிவது என்னை மீண்டும் மீண்டும் மீளா வியப்பிலாழ்த்துகிறது. தான் நேசிப்பவன் சிறந்தவனல்ல என்ற முடிவிற்கு வந்துவிட்ட பிறகும் நினைக்கவும் முடியாமல் நினையாதிருக்கவும் முடியாமல் அவள் தவிப்பது எதனால்?  இத்தனை துயரம் நிரம்பியிருந்தும் இது ஓர் பெண்ணின் மன முறிவைச் சொல்லும் சோகப் பாடலாக ஏன் தோன்றவில்லை? எந்நேரமும்  பற்றி எரியக் கூடிய வீரியமிக்க தணல்களாக, அவை வெளியிடும் வெப்பப் பெருமூச்சாக காட்சியளிக்கும் இவ்வரிகளிலும் கூட, அவள் காதலை பிரிவாற்றாமையின் வடிவில் அடையாளம் கண்டுகொள்ள முடிவதால் தானா?

ஒவ்வொரு ஊடலின் போதும் அதன் ரகசிய அடுக்குகளிலிருந்தே கூடலுக்கான காத்திருப்பும் கசியத் தொடங்கி விடுகிறது. கோபத்தின் தகிப்பிலும் அதை அணைக்கும் கரங்களுக்கான ஏக்கத்திலும் அக்காத்திருப்பு உக்கிரமடைகையில் அது தன்னிரக்கமாகவும், வெறுப்பாகவும், சில நேரங்களில் காலத்தால் அழியாத கவிதையாகவும் உருப்பெற்று விடும் போல!

இவ்வுணர்வெழுச்சியின் அபாரமான மறு நுனியாக விளங்குகிறது மற்றோர் பாடல்..

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல் அவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.

-அள்ளூர் நன்முல்லையார். (குறு.93)

என்னுடைய அழகு தொலைந்து, உடல் நலம் மிகவிழந்து என்னுடைய உயிர் இவ்வுடலை விட்டு நீங்கினாலும் சரி.. அவரைப் பற்றி தவறாகப் பேசாதே. அவர் நமக்கு அன்னையையும் தந்தையையும் போன்றவர் அல்லவா தோழி? அன்பில்லாதவிடத்தில்  ஊடல் எப்படி தோன்றும்?

இப்பாடலைப் படிக்கும் போதெல்லாம் மெய்சிலிர்த்துக் கொள்கிறேன்! என்னவொரு உணர்ச்சிப் பிழம்பான சித்திரம் இது! இப்பாடலின் பின்புலம் என்னவாக இருக்கும்? கணவன்/காதலன் என்ன காரணத்தாலோ கோபித்துச் சென்றிருக்கிறான். சென்றவன் வெகுநாட்களாய் திரும்பவுமில்லை. இனித் திரும்புவானா என்ற நிச்சயமின்மையின் விளிம்பில் நின்றபடி அவனை சந்தேகித்துப் பேசுகிறாள் தோழி. அத்தோழிக்கு இவள் தரும் ஆணித்தரமான பதில் இது.

தன் நலங்கள் தொலைந்தாலும் தானே இறக்க நேரிட்டாலும் அப்போதும் அவனைக் கடிந்து கொள்ள விரும்பாத, அவனை காதலனாக மட்டுமின்றி தாயுமானவனாகவும் எண்ணி மனம் குழைகின்ற பேரன்பையும்,  'புலவி அஃதெவனோ அன்பிலங்கடையே?' என்ற வரியில் ஊற்றெடுத்துப் பெருகும் அதீத நம்பிக்கையையும் என்னவென்று வரையறுப்பது?  அன்பில்லாவிட்டால் ஊடல் எங்கிருந்து தோன்றும்? அவனது கோபம் தன் மேலான நேசத்தின் மீதும் உரிமையின் மீதும் வரையப்படும் நீர்க்கோலம் என்பதை அவள் எப்போதும் அறிந்தே வைத்திருக்கிறாள் என்ற உண்மையை மிக அழகாய் புலப்படுத்துகிறது இக்கேள்வி. கவிதையோ, பூரண நிலவைப் போல, பொங்கித் ததும்பும் நிறைகுடம் போல ஒரு முழுமையை உணரும் அனுபவத்தைத் தந்து வாசிக்குந்தோறும் மனதை நிறைக்கிறது.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

கலாப்ரியாவும் மிளைபெருங்கந்தனாரும்

கலாப்ரியாவின் “வனம் புகுதல்” என்ற கவிதைத் தொகுப்பில் இரு கவிதைகள். “தெரு விளக்கு”, “வீதி விளக்குகள்” என்ற அந்த இரு கவிதைகளிலும்,

“திடீரென அணைந்த நேரம்
கள்ளன் போலீஸோ
கல்லா மண்ணாவோ”


என தொடங்கி தொடரும் 10 வரிகள் பொதுவாய் வரும். அதைச்சுற்றி எழுப்பப்பட்ட மற்ற வரிகளின் மூலம் அவ்விரு கவிதைகளும் தத்தம் தனித்தன்மையினை அடையும்.

தெரு விளக்கு

திடீரென அணைந்த நேரம்
கள்ளன் போலீசோ
கல்லா மண்ணாவோ
சட்டென நிறுத்திவிட்டு
தன்னிலும் சிறுசுகளை
பயமுறுத்தி…
தடைப்பட்ட மின்சாரம்
மீண்டும் பளீரென வரும் போது
தன்னிச்சையாய்க்
கைதட்டி பிள்ளைகள்
கும்மாளமாய் கூக்குரலிடும்
ஜாடைகளற்ற
சந்தோச மொழி வழியே
எந்த மாநிலத்தை
பிரிக்கப்போகிறார்.
***
வீதி விளக்குகள்
அருகே வரும் வரை
பின்னாலிருந்தது
தாண்டும் வரை
காலடியில்
தள்ளிப்போக தள்ளிப்போக
பூதாகரமாய்
முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடு திரும்புவனின் நிழல்
திடீரென அணைந்த பொழுது
கள்ளன் போலீசோ
கல்லா மண்ணாவோ
சட்டென விளையாட்டை
நிறுத்திவிட்டு
ஒன்றுக்கொன்று பயமுறுத்தி
தடைப்பட்ட மின்சாரம்
பளீரென மீளும் போது
தன்னிச்சையாய்க் கை தட்டி
கூக்குரல் எழுப்பும்
குழந்தைகளின்
ஜாடைகளற்ற
சந்தோச வெளிச்சம்
காணமலாக்கும்
கவலையின் நிழல்களை

இந்த கவிதைகளை முதல் முறை வாசித்த போது என்னை ஈர்த்தது இந்த “பொதுவாய் சில வரிகள்” அம்சம் தான். படித்த போது கவிதை மட்டுமே தரக்கூடிய குறுகுறுப்பை தந்த கவிதைகள் இவை. ஆனால் வடிவத்தையும் தாண்டி தனித்தனியாகவும் மிகச்சிறந்த கவிதைகள். முதல் கவிதையில் கவிஞனின் பார்வை குழந்தைகளின் விளையாட்டின் மீது குவிகிறது. இரண்டாவது கவிதை அந்த ஆட்டம் நிகழும் போது அவ்வழியே கவலை தோய்ந்த முகத்துடன் கடந்து போகும் மனிதனின் மீது. ஒரு வகையில், முதல் கவிதையின் நீட்சியாக இரண்டாம் கவிதை விரிகிறது.

குறுந்தொகையில் மிளைப்பெருங் கந்தனார் எழுதிய இரு கவிதைகளில் இது போன்ற ஓர் வடிவத்தை காண முடிந்தது.

“காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே”

என்ற இரு வரிகள் பொதுவாய் கொண்ட கவிதைகள் அவை. இரு கவிதைகளும் காமத்தின் இரு வேறு அம்சங்களைப் பற்றி பேசுகின்றன. மிளைப்பெருந்தனாரையும் கலாப்ரியாவையும் அருகருகில் நிறுத்திப்பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

அணங்கு என்றால் சோகம் என்று பொருள். என்னை மிகவும் பாதித்த குறுந்தொகை வரி ஒன்று உண்டு. “யார் அணங்குற்றனை கடலே” என்று கடலை நோக்கி கேட்பாள் தலைவி. இதற்கு என்ன பொருள்? யாருக்காக சோகப்பட்டாய் என்பது தானே அந்த வரிக்கான பொருள்? ஆனால் அணங்கு என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் உண்டு என்று பின்னர் அறிந்தேன். சன்னதம் கொண்டு ஆடுதல், பேய்ப்பிடித்து ஆடுதல். இப்பொழுது அந்த “யார் அணங்குற்றனை கடலே” வரியின் பொருள் என்ன? “யாருக்காக வெறிபிடித்து ஆடுகிறாய் கடலே? “ அல்லது “யார் காரணமாக வெறி பிடித்து ஆடுகிறாய் கடலே?”. கடலின் கொந்தளிப்பின் முன் நின்று நான் இந்த வரியை உச்சரித்திருக்கிறேன். இன்று இந்த வரியை கற்பனாவாத வரி என்று ஒரு விமர்சகன் நிராகரிக்கலாம். ஆனால் அந்த வரியுள் புதைந்திருக்கும் எழுச்சி உணரக்கூடிய ஒன்று.

காமம் என்பது அணங்கோ நோயோ அல்ல என்கிறார் மிளைப்பெருங்கந்தனார். இங்கு அணங்கு என்பதற்கு சோகம், துயரம் என்று பொருள் கொள்ளலாம். வெறி வந்தாடுதல் என்ற பொருள் கொண்டால் அந்த கணம் மட்டுமே தோன்றும் உணர்வெழுச்சி என்ற பொருளும் வருகிறது அல்லவா? சரி, துயரமோ, உணர்வெழுச்சியோ, நோயோ அல்ல காமம். பின் என்ன தான் அது? விளங்கங்களுக்குள் போவதற்கு முன்... இங்கு காமம் என்பதை உடல்சார்ந்த காமம் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் உளம் சார்ந்த காதலையும் குறிப்பதாக கொண்டால் பாடலின் வீர்யம் அதிகரிப்பதாகத் தோன்றுகிறது.

முதல் விளக்கத்தை பார்க்கலாம்.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்றாள் மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.

- மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 136)
காமம் காமம் என்கிறாயே, காமம் என்பது அணங்கோ பிணியோ அல்ல. அது குறைவதும் இல்லை, தணிவதும் இல்லை. அதிமதுர தழைகளை உண்ட யானையின் உணர்வெழுச்சி போன்றது அது. யானை ஒரு முறை மிக இனிப்பான அந்த தழைகளை உண்டதும் அது உணர்வெழுச்சு கொள்கிறது. அந்த உணர்வெழுச்சி எங்கே போகிறது? எங்கும் இல்லை. தணியாது குறையாது அதனுள் உறைகிறது அந்த உணர்வெழுச்சி. அதே தழைகளை மீண்டும் பார்த்த கணம் அது குடம் உடைந்து நீர் வெளியேறுவது போல வெளியேறுகிறது. அது போன்றது தான் காதலும் என்கிறார். காதல் ஒரு முறை வரும் உணர்வெழுச்சி அல்ல. காதல் கொண்டவரை காணும் போதெல்லாம் பொங்கும் உணர்வு. இதுவே முதல் விளக்கம்.

அடுத்த விளக்கம்,

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.

- மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 204)
காமம் காமம் என்கிறாயே, காமம் என்பது அணங்கோ பிணியோ அல்ல. மேட்டு நிலத்தில் விளைந்த முற்றாத இளம்புல்லை முதிய பசு ஒரே சமயத்தில் உண்டு முடிக்காமல் அசை போட்டுக்கொண்டே இருக்குமே அது போல நினைக்க நினைக்க இன்பம் தருவது அது. இலை, புல் ஆகியவை ஜீரணிக்க மிகவும் கடினமான பொருட்கள். ஒவ்வொரு மிருகமும் இதை ஒவ்வொரு விதத்தில் எதிர்கொள்கிறது. ஆடு மாடு போன்ற கால்நடைகள் உண்ட இலைகளை மீண்டும் வாய்பகுதிக்கு கொண்டு வந்து அசை போடுகின்றன. வயதான பசுவின் ஜீரணசக்தி இன்னமும் மழுங்கியே இருக்கும். அசை போடுதலின் நீளம் அதிகமாகவே இருக்கும். அசை போடப் போட இலையிலிருந்து புதுப்புது சுவைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த இலைகளுடன் ஏன் காதலை ஒப்புமைப்படுத்த வேண்டும்? காதலும் அது நிகழும் பொழுது முழுதும் புரிவதில்லையா? அதை அசை போடப் போடத்தான் பிடிபடுகிறதா? காதல் என்ன என்பதும் ஒவ்வொரு முறை “அசை” போடும் போதும் புதிதாக உருவாகி வருகிறதா?

இன்னொன்றும் உள்ளது. இந்த இரண்டாம் விளக்கம் முதல் விளக்கத்தின் ஒரு வெற்றிடத்தை நிரப்புகிறது. முதல் விளக்கத்தில் காதல் காதலிப்பவரை காணும் தோறும் வரும் உணர்ச்சி என்கிறது. எனில் காணாத போது? காணாத போதும் அசை போடுதலை போன்று இன்பம் பயப்பது அது.


குறிப்பு : எனது பழைய கட்டுரை ஒன்றின் நீட்சி இது.

திங்கள், 4 ஜனவரி, 2010

உறக்கமற்ற காத்திருப்பு - 3

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.

-கொல்லன் அழிசி. (பாடல் : 138)


ஊரே தூங்கியும் நான் தூங்காது விழித்திருக்கிறேன்,
என் வீட்டிற்கு வெளியே உள்ள மேட்டுநிலத்தில் நிற்கும்
மயிலின் காலடிகளைப் போன்ற இலைகளைக் கொண்ட
நொச்சி மரத்தின் அழகிய கிளைகள் உதிர்க்கும்
மலர்களின் ஓசையை கேட்ட படியே

குறுந்தொகையின் மிகச்சிறந்த கவிதையினை தேர்ந்தெடுக்கச் சொன்னால் நான் இந்த கவிதையையே தேர்ந்தெடுப்பேன். நான் இந்த இரவிலும் உறங்காதிருக்கிறேன், மரம் மலர்களை உதிர்க்கும் ஓசையை கேட்டபடி... இவ்வளவு தான் இந்த கவிதை. இவ்வளவு தானா? வாசகனின் மேல் அபாரமான நம்பிக்கையை வைக்கும் குறுந்தொகை கவிதைகளுள் இதுவும் ஒன்று (செங்களம் பட... இன்னொரு கவிதை). ஜெயமோகன் இக்கவிதையை பற்றி சங்கச்சித்திரங்கள் நூலில் பேசும் போது இவ்வாறு சொல்கிறார்.

மலர் உதிரும் ஓசையை கேட்டோம் என்றால் என்ன பொருள்? அத்தனை செவிகூர்ந்தது என்றா? நெஞ்சின் எண்ணங்களின் ஒலியா அது? இல்லை, பூத்துக் காத்திருந்த நம்பிக்கைகள் உதிரும் ஒலியா? காலடி இல்லாது நடக்கும் காலம் தானா? இத்தனை மௌனமாகச் சொல்லப்படவேண்டிய அந்த உக்கிரம் தான் என்ன?
- சங்கச்சித்திரங்கள் (பக் : 144)


மலர் உதிரும் ஓசையை கேட்டு விட முடியுமா என்ன? எனில் கவிஞன் கேட்பது எதை? வெளியே நிற்கும் மரம் இவனது அகத்தில் உதிர்க்கும் பூவின் ஓசையையா? இந்த கவிதையி ல் குடிகொண்டுள்ள அபாரமான அமைதியே வாசகனின் இடம். வாசகனின் அனுபவங்களால் நிரப்பப்படவேண்டிய வெளி அது. ஒரு ஜென் கவிதை உண்டு.

நேற்றிரவும் அல்ல,
இன்று காலையும் அல்ல -
பூசணிப் பூக்கள் மலர்ந்தது.

- மட்ஸுவோ பாஷோ (மொழிபெயர்ப்பு : யுவன் சந்திரசேகர், பெயரற்ற யாத்ரீகன்)


இந்த கவிதையை இது வரை நானும் காயத்ரியும் எத்தனையோ சந்தர்பங்களில் சந்தித்திருக்கிறோம். எப்போது காதல் வந்தது? எப்போது அந்த கவிதை புரிய ஆரம்பித்தது? அந்த பகை எந்த புள்ளியில் உருவானது? எப்போது எனை தொற்றிக்கொண்டது இந்த மென்சோகம்? எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான். பூசணிப் பூக்கள் மலர்ந்த போது. எப்போதெல்லாம் ஒரு நிகழ்வு தனது "எப்போதை" பூடகமாக மறைத்துவைத்திருக்கிறதோ... அப்போதெல்லாம் இந்த கவிதை வந்து போகும். ஏனெனில் இந்த கவிதை நம் மனதில் ஒரு வெற்று கிண்ணத்தை வைக்கின்றது. வாசகனின் அனுபவங்கள் தானாய் வந்து கிண்ணத்தை நிறைக்கின்றன. கடலையும் அடைக்கவல்ல கிண்ணம் அது. இந்த குறுந்தொகை பாடலிலும் இதுவே காணக்கிடைக்கிறது. இங்கு நிகழ்வது "இரவில் ஒலிகேட்டபடி உறங்காதிருத்தல்" மட்டுமே. நான் இதை காத்திருப்பு என்கிறேன். ஊடல் கொண்ட இரவினில் அது குற்றவுணர்வு. இழப்பின் துக்கம் தாளாத இரவினில், பிரிவாற்றாமை. உக்கிரமான உதாசனத்திற்கு உள்ளான இரவினில், கழிவிரக்கம். திசைகள் தொலைத்த இரவினில், வெறுமை. காரணமேதுமின்றி, உறக்கம் கொள்ளாத இரவினில், கடலினும் பெரிய கங்குல் வெள்ளத்தை கடக்க உதவும் ஓடமாக மாறலாம் அந்த மணிமருள் பூவின் பாடு நனி. ஒரு கவிதையை நாம் வாசித்து முடிக்கும் போது அந்த கவிதை நம் மனதினுள் தன் வாழ்வினை துவங்குகின்றது. இனி நிகழ்வதெல்லாம் நம் வாழ்க்கை அக்கவிதையுடன் நிகழ்த்தும் உரையாடல்களே.

புதன், 30 டிசம்பர், 2009

உறக்கமற்ற காத்திருப்பு.... - 2

மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.

-ஔவையார் (குறுந்தொகை 28 - பாலை - தலைவி கூற்று )


முட்டுவேனா? தாக்குவேனா? தெரியவில்லை
நானுமோர் தன்மை மிகுந்து ஆ அ ஓ என அலறுவேனா?
மெல்லிய காற்று கூட அலைக்கழிக்கும் அளவிற்கு என்னை
துக்கம் நோயாக பீடித்திருப்பதை
அறியாது உறங்கும் இந்த ஊரை என்ன செய்வேன்?




ஜார்ஜ் எல். ஹார்ட்டுடனான பேட்டி ஒன்றில் (அ. முத்துலிங்கம் எடுத்தது என நினைக்கிறேன்), இந்த பாடலைப் பற்றி பேச்சு வந்தது. பேட்டியாளர் இந்த பாடல் விரகதாபத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் காமத்தின் வெளிப்பாடே என்றார் (உண்மையில் இன்னும் கீழிறங்கி, ஒரு பெண் சுய இன்பம் கொள்வதன் விவரிப்பே இப்பாடல் என்றார்). ஹார்ட் என்ன பதிலளித்தார் என நினைவில் இல்லை. இது ஒரு வாசிப்பு.

இப்பாடலை காமத்தின் வெளிப்பாடாக காண்பது சரியா தவறா என்ற கேள்விக்கு எந்த பொருளும் இல்லை. அந்த வாசிப்பிற்கான சாத்தியங்களும் இந்த பாடலில் உள்ளன என்பது உண்மையே.

இந்தப் பாடலை சுற்றியுள்ள தகவல்களை எடுத்துக்கொள்வோம். பாலை நிலப்பாடல் இது. பாலை பிரிவிற்கான நிலம். ஆக இந்த பாடல் ஓர் பிரிவை பேசுகிறது. தலைவி கூற்றாக வரும் பாடல் இது. தலைவனின் பிரிவு துயர் தாளாத தலைவின் புலம்பல். இந்த புலம்பல் உடல் சார்ந்த வெளிப்பாடாக வருகிறது பாடலில் : முட்டுதல், தாக்குதல் என. இந்த புள்ளியிலிருந்து காமத்தை சென்றடைவது வெகு இயல்பான ஒரு வாசிப்பே....

ஆனால் எனக்கு இந்த பாடல் ஒரு தற்காலிக பிரிவை மட்டும் சொல்வதாக படவில்லை. அதனினும் ஆழமாக ஓர் பிரிவின் ஆற்றாமை தெரிகிறது அதில். இதோ இந்த வாரம் ஆழிப்பேரலையின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் வந்து போனது. தொலைகாட்சி செய்தியில் ஒரு காட்சியை காண்பித்தார்கள். ஆழிப்பேரலை அடித்து ஓய்ந்த மறுதினம் எடுக்கப்பட்ட காட்சி. ஓர் அறையில் பிணங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடக்கின்றன. மெலிந்து காணப்பட்ட ஒரு பெண் அந்த அறையை சுற்றி சுற்றி வருகிறாள். அவளது கைகள் மார்பை அறைந்தபடி உள்ளன. ஐயோ ஐயோ என்ற கதறல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இன்று இந்த பாடலை படித்த பொழுது அந்த ஐயோ என்ற கதறல் அதே வீச்சுடன் ஒலித்து கனமேற்றுகிறது மனதை. இறந்தது யார் என நமக்கு தெரியாது. அவளது கணவனாக இருக்கலாம். மகனோ மகளோவாக இருக்கலாம். அல்லது இவர்கள் அனைவருமாக.

அன்றிரவு அந்த பெண் எங்கிருந்திருப்பாள்? என்ன நினைத்திருப்பாள்? அவளும் இப்படித்தானே ஆற்றாமையில் சென்று முட்டியிருப்பாள்? அவளது துயரறியாது உறங்கும் இந்த உலகே பகையாக தோன்றியிருக்காதா அவளுக்கு?

பிரிவு ஓர் இரவு மிருகம். அது தனது ஆதிக்கம் முழுவதையும் மகா வீரியத்தோடு செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் முடிவின்றி நீளும் உறக்கமற்ற இரவுகளும், விடியலுக்கான காத்திருப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும் போலும்.


புதன், 23 டிசம்பர், 2009

உறக்கமற்ற காத்திருப்பு - 1




குறுந்தொகையை வாசிக்க ஆரம்பித்த பொழுது அதன் வீரியம் என்னை அலைகழித்தது. எங்களை பிரித்த மிக நீண்ட காலவெளியான 2000 வருடங்கள் அதற்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. புத்தகம் ஒன்றின் பாதிப்பில் உறக்கம் கொள்ளாது தவித்த இரவில், நானும் காயத்ரியுமாய் சீறும் கடல் அலைகளின் முன்பாக நிற்கையில், மகனை பிரிந்த தாயினை திரைப்படம் ஒன்றில் காண நேர்கையில்... என எதிர்பாரா தருணங்களில் எல்லாம் என் முன் வந்து நின்றது குறுந்தொகை.

காதலர்களால் மட்டுமே காத்திருப்பை அதன் முடிவிலா வடிவில் உணர முடியும் என நான் அறிந்த நாளில், குறுந்தொகை எனக்கு மிக மிக அருகில் வந்துவிட்டிருந்தது. குறுந்தொகையை எனது அப்போதைய மனம் காத்திருப்பின் வாக்குமூலங்களின் தொகுப்பாக கண்டது. அந்த உந்துதலில் காத்திருப்பின் வலி ஏறிய குறுந்தொகை பாடல்களை தொகுத்து ”பண்புடன்” குழுமத்தில் இட்டேன். அதை தொடர் பதிவாக இங்கே இடுகிறேன்.


 நெய்தல் - தலைவி கூற்று


நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

-பதுமனார்.

நள்ளென்றன்றே யாமம் - வந்துவிட்டது இரவு.

சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள் - சொற்கள் இல்லாதாகி மக்கள் இனிதாய் உறங்கிவிட்டனர்.

முனிவின்று நனந்தலை உலகமும் துஞ்சும் - கோபமோ வெறுப்போ இல்லாது நிம்மதியாக முழு உலகமும் உறங்குகிறது.

ஓர் யான் மன்ற துஞ்சாதேனே - நான் ஒருவள் மட்டும் உறங்காமல் இருக்கிறேன்.

இந்த கவிதை காத்திருப்பை பற்றித்தான் பேசுகிறது என்றே நம்புகிறேன். உலகம் முழுதும் உறங்குகையில் உறக்கம் கொள்ளாமல் தவிக்கும் ஒரு மனதின் புலம்பல் இந்த கவிதை. பெரும்பாலான குறுந்தொகை பாடல்களை போல இந்த பாடலும் மிக மிக குறைந்த புள்ளிகளை கொண்டு வரையப்பட்ட கோலமே. தகவல் என்று என்ன இருக்கிறது இந்த பாடலில்?  நீங்களெல்லாம் தூங்குகிறீர்கள்... நான் மட்டும் தூங்காதிருக்கிறேனே என்கிறாள்/ன். இப்பாடலை சுற்றி உள்ள தலைவி கூற்று, நெய்தல் திணை போன்ற மீதகவல்களை (metadata) எடுத்துவிடலாம். என்ன எஞ்சுகிறது? நாம் நம் அகம் கொண்டு கடக்கக்கூடிய ஒரு கவியனுபவம் மட்டும். அங்கிருந்து நாம் செல்லக்கூடிய தூரத்தை தீர்மானிப்பது நாமே. நாங்கள்  இக்கவிதை குறித்து பேசிக் கொண்டிருந்த போது தோன்றியவை...


* மக்கள் சொல்லவிந்தடங்கினரே என்று ஏன் சொல்ல வேண்டும்? இவளது மனதினுள் ஓயாமல் சொற்கள் பெருகியபடியே இருப்பதனால் தானோ?


* சொல்லற்ற தன்மையும், நிம்மதியான உறக்கமும் எனக்கு மட்டும் ஏன் வாய்க்கவில்லை என்ற துக்கம், அதற்கு என்ன அல்லது யார் காரணம் என்ற கேள்வி இந்த தலைவிக்கு மட்டும் உரியது தானா? நம்மில் ஒவ்வொருவரும் எதோவோர் பொழுதில் இத்துக்கத்தை உணர்ந்ததில்லையா?


* சிறிய சாளரம் வழியாக வானத்தை வேடிக்கை பார்ப்பது போல.. அவளது வாழ்க்கையை நாம் பார்க்க வாய்த்த சிறிய சன்னலே இந்த பாடல்.


* அந்த சன்னல் வழியாக  நாம் பார்க்கின்ற வாழ்க்கை ஆச்சரியகரமாக நம் வாழ்க்கையை போலவே இருக்கின்றது.. வானம் எல்லோருக்கும் ஒன்று தானே?


பேசி முடிக்கையில் முத்தாய்ப்பாய் ஒன்று தோன்றிற்று. கவிதையை வாசித்தல் என்பது அக்கவிதையின் பல்வேறு வகையான சாத்தியங்களை கண்டடையும் முயற்சி தானேயன்றி முழுமையான புரிதல் எவருக்கும் சாத்தியமில்லை.. படைப்பாளிக்கும் கூட.