செவ்வாய், 12 ஜனவரி, 2010

கலாப்ரியாவும் மிளைபெருங்கந்தனாரும்

கலாப்ரியாவின் “வனம் புகுதல்” என்ற கவிதைத் தொகுப்பில் இரு கவிதைகள். “தெரு விளக்கு”, “வீதி விளக்குகள்” என்ற அந்த இரு கவிதைகளிலும்,

“திடீரென அணைந்த நேரம்
கள்ளன் போலீஸோ
கல்லா மண்ணாவோ”


என தொடங்கி தொடரும் 10 வரிகள் பொதுவாய் வரும். அதைச்சுற்றி எழுப்பப்பட்ட மற்ற வரிகளின் மூலம் அவ்விரு கவிதைகளும் தத்தம் தனித்தன்மையினை அடையும்.

தெரு விளக்கு

திடீரென அணைந்த நேரம்
கள்ளன் போலீசோ
கல்லா மண்ணாவோ
சட்டென நிறுத்திவிட்டு
தன்னிலும் சிறுசுகளை
பயமுறுத்தி…
தடைப்பட்ட மின்சாரம்
மீண்டும் பளீரென வரும் போது
தன்னிச்சையாய்க்
கைதட்டி பிள்ளைகள்
கும்மாளமாய் கூக்குரலிடும்
ஜாடைகளற்ற
சந்தோச மொழி வழியே
எந்த மாநிலத்தை
பிரிக்கப்போகிறார்.
***
வீதி விளக்குகள்
அருகே வரும் வரை
பின்னாலிருந்தது
தாண்டும் வரை
காலடியில்
தள்ளிப்போக தள்ளிப்போக
பூதாகரமாய்
முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடு திரும்புவனின் நிழல்
திடீரென அணைந்த பொழுது
கள்ளன் போலீசோ
கல்லா மண்ணாவோ
சட்டென விளையாட்டை
நிறுத்திவிட்டு
ஒன்றுக்கொன்று பயமுறுத்தி
தடைப்பட்ட மின்சாரம்
பளீரென மீளும் போது
தன்னிச்சையாய்க் கை தட்டி
கூக்குரல் எழுப்பும்
குழந்தைகளின்
ஜாடைகளற்ற
சந்தோச வெளிச்சம்
காணமலாக்கும்
கவலையின் நிழல்களை

இந்த கவிதைகளை முதல் முறை வாசித்த போது என்னை ஈர்த்தது இந்த “பொதுவாய் சில வரிகள்” அம்சம் தான். படித்த போது கவிதை மட்டுமே தரக்கூடிய குறுகுறுப்பை தந்த கவிதைகள் இவை. ஆனால் வடிவத்தையும் தாண்டி தனித்தனியாகவும் மிகச்சிறந்த கவிதைகள். முதல் கவிதையில் கவிஞனின் பார்வை குழந்தைகளின் விளையாட்டின் மீது குவிகிறது. இரண்டாவது கவிதை அந்த ஆட்டம் நிகழும் போது அவ்வழியே கவலை தோய்ந்த முகத்துடன் கடந்து போகும் மனிதனின் மீது. ஒரு வகையில், முதல் கவிதையின் நீட்சியாக இரண்டாம் கவிதை விரிகிறது.

குறுந்தொகையில் மிளைப்பெருங் கந்தனார் எழுதிய இரு கவிதைகளில் இது போன்ற ஓர் வடிவத்தை காண முடிந்தது.

“காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே”

என்ற இரு வரிகள் பொதுவாய் கொண்ட கவிதைகள் அவை. இரு கவிதைகளும் காமத்தின் இரு வேறு அம்சங்களைப் பற்றி பேசுகின்றன. மிளைப்பெருந்தனாரையும் கலாப்ரியாவையும் அருகருகில் நிறுத்திப்பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

அணங்கு என்றால் சோகம் என்று பொருள். என்னை மிகவும் பாதித்த குறுந்தொகை வரி ஒன்று உண்டு. “யார் அணங்குற்றனை கடலே” என்று கடலை நோக்கி கேட்பாள் தலைவி. இதற்கு என்ன பொருள்? யாருக்காக சோகப்பட்டாய் என்பது தானே அந்த வரிக்கான பொருள்? ஆனால் அணங்கு என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் உண்டு என்று பின்னர் அறிந்தேன். சன்னதம் கொண்டு ஆடுதல், பேய்ப்பிடித்து ஆடுதல். இப்பொழுது அந்த “யார் அணங்குற்றனை கடலே” வரியின் பொருள் என்ன? “யாருக்காக வெறிபிடித்து ஆடுகிறாய் கடலே? “ அல்லது “யார் காரணமாக வெறி பிடித்து ஆடுகிறாய் கடலே?”. கடலின் கொந்தளிப்பின் முன் நின்று நான் இந்த வரியை உச்சரித்திருக்கிறேன். இன்று இந்த வரியை கற்பனாவாத வரி என்று ஒரு விமர்சகன் நிராகரிக்கலாம். ஆனால் அந்த வரியுள் புதைந்திருக்கும் எழுச்சி உணரக்கூடிய ஒன்று.

காமம் என்பது அணங்கோ நோயோ அல்ல என்கிறார் மிளைப்பெருங்கந்தனார். இங்கு அணங்கு என்பதற்கு சோகம், துயரம் என்று பொருள் கொள்ளலாம். வெறி வந்தாடுதல் என்ற பொருள் கொண்டால் அந்த கணம் மட்டுமே தோன்றும் உணர்வெழுச்சி என்ற பொருளும் வருகிறது அல்லவா? சரி, துயரமோ, உணர்வெழுச்சியோ, நோயோ அல்ல காமம். பின் என்ன தான் அது? விளங்கங்களுக்குள் போவதற்கு முன்... இங்கு காமம் என்பதை உடல்சார்ந்த காமம் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் உளம் சார்ந்த காதலையும் குறிப்பதாக கொண்டால் பாடலின் வீர்யம் அதிகரிப்பதாகத் தோன்றுகிறது.

முதல் விளக்கத்தை பார்க்கலாம்.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்றாள் மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.

- மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 136)
காமம் காமம் என்கிறாயே, காமம் என்பது அணங்கோ பிணியோ அல்ல. அது குறைவதும் இல்லை, தணிவதும் இல்லை. அதிமதுர தழைகளை உண்ட யானையின் உணர்வெழுச்சி போன்றது அது. யானை ஒரு முறை மிக இனிப்பான அந்த தழைகளை உண்டதும் அது உணர்வெழுச்சு கொள்கிறது. அந்த உணர்வெழுச்சி எங்கே போகிறது? எங்கும் இல்லை. தணியாது குறையாது அதனுள் உறைகிறது அந்த உணர்வெழுச்சி. அதே தழைகளை மீண்டும் பார்த்த கணம் அது குடம் உடைந்து நீர் வெளியேறுவது போல வெளியேறுகிறது. அது போன்றது தான் காதலும் என்கிறார். காதல் ஒரு முறை வரும் உணர்வெழுச்சி அல்ல. காதல் கொண்டவரை காணும் போதெல்லாம் பொங்கும் உணர்வு. இதுவே முதல் விளக்கம்.

அடுத்த விளக்கம்,

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.

- மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 204)
காமம் காமம் என்கிறாயே, காமம் என்பது அணங்கோ பிணியோ அல்ல. மேட்டு நிலத்தில் விளைந்த முற்றாத இளம்புல்லை முதிய பசு ஒரே சமயத்தில் உண்டு முடிக்காமல் அசை போட்டுக்கொண்டே இருக்குமே அது போல நினைக்க நினைக்க இன்பம் தருவது அது. இலை, புல் ஆகியவை ஜீரணிக்க மிகவும் கடினமான பொருட்கள். ஒவ்வொரு மிருகமும் இதை ஒவ்வொரு விதத்தில் எதிர்கொள்கிறது. ஆடு மாடு போன்ற கால்நடைகள் உண்ட இலைகளை மீண்டும் வாய்பகுதிக்கு கொண்டு வந்து அசை போடுகின்றன. வயதான பசுவின் ஜீரணசக்தி இன்னமும் மழுங்கியே இருக்கும். அசை போடுதலின் நீளம் அதிகமாகவே இருக்கும். அசை போடப் போட இலையிலிருந்து புதுப்புது சுவைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த இலைகளுடன் ஏன் காதலை ஒப்புமைப்படுத்த வேண்டும்? காதலும் அது நிகழும் பொழுது முழுதும் புரிவதில்லையா? அதை அசை போடப் போடத்தான் பிடிபடுகிறதா? காதல் என்ன என்பதும் ஒவ்வொரு முறை “அசை” போடும் போதும் புதிதாக உருவாகி வருகிறதா?

இன்னொன்றும் உள்ளது. இந்த இரண்டாம் விளக்கம் முதல் விளக்கத்தின் ஒரு வெற்றிடத்தை நிரப்புகிறது. முதல் விளக்கத்தில் காதல் காதலிப்பவரை காணும் தோறும் வரும் உணர்ச்சி என்கிறது. எனில் காணாத போது? காணாத போதும் அசை போடுதலை போன்று இன்பம் பயப்பது அது.


குறிப்பு : எனது பழைய கட்டுரை ஒன்றின் நீட்சி இது.

4 கருத்துகள்:

நர்சிம் சொன்னது…

அற்புதம் சித்தார்த்..நிறைய பழக வேண்டும் பாஸ் உங்களிடம். மிகப் பிடித்த இடுகை.

Unknown சொன்னது…

நன்றி நர்சிம்.

manjoorraja சொன்னது…

பிரமாதமான விளக்கம். தெளிவான எழுத்து. இனிய சுவை.

அணங்கு என்றால் பெண் என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறதோ! எனக்கு தெரியலெ(ஆறணங்கு)

பெயரில்லா சொன்னது…

காதல் ,காமம் இரண்டுமே ரொம்பவும் அந்தரங்கமான உணர்வு.சத்தமாக உச்சரித்தால் கூட நலுங்கும். அந்த மென்மையை மென்மையாய்
ஒலிக்கும் பத்தி.அருமை.