வெள்ளி, 16 நவம்பர், 2012

கண் களவு கொள்ளும் சிறு நோக்கம்..



அது ஒரு கவிதை. கவிதை கூட அல்ல.. ஓர் அந்தரங்க உரையாடல். காதலியாகப் போகும் பெண்ணுக்கும் அவளைக் காதலித்துக் கொண்டிருக்கும் ஆணுக்குமிடையேயானது. காதலும், குறும்பும், இளமைக்கேயுரிய துடுக்குத் தனமும், கொஞ்சலும், மயக்கங்களும் நிரம்பியது. கலைடாஸ்கோப்பில் நிரப்பிய வளையல் துண்டுகள் போல கூடியும் கலைந்தும் வர்ணஜாலமிடும் இவ்வரிகளை அடிக்கடி முணுமுணுத்தபடியிருக்கிறது மனது.

 முதலில், குறும்பு கொப்பளிக்கும் கண்களும் இளமை ததும்பும் முகமுமாய் துறுதுறுவென்றிருக்கும் 21 - 25 வயது இளைஞன் ஒருவனை கற்பனை செய்து கொள்ளுங்கள். இயலாதவர்கள் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் - தெலுங்கு பட சித்தார்த்தையோ, மெளனராகம் கார்த்திக்கையோ உருவகித்துக் கொள்ளலாம். காதலியாக எதோவொரு பாவாடை தாவணி நாயகி. அவள், கொஞ்சம் பயமும், கொஞ்சம் நாணமும், கொஞ்சம் பாவனைகளும்,  அவளே இன்னும் அறிந்திராமல் அகத்தில் ஒளிந்திருக்கும் காதலும், நிறைய பொய்க்கோபங்களும் பிரதிபலிக்கும் இளம்பெண்ணாக இருக்க வேண்டும். என்னவோ.. இந்தப் பாடலைப் படிக்கும் போதெல்லாம் வானின் நீலத்தில் பாதம் தொட்டுரசும் பாவாடையும், கடற்பச்சை நிறத்தில்  நறுமணப் புகை போல காற்றில் அசையும் தாவணியும் அணிந்த 18 வயதுப் பெண்ணொருத்தி என் கற்பனையில் தோன்றுவாள். அவளின் பொய்யான அலட்டலும், முகச்சுளிப்பும், உதடுகளின் விளிம்பில் மெலிதாய்த் தொக்கி நிற்கும் புன்னகையும், கோபமென்றும் நாணமென்றும் பிரித்தறியவியலாத கன்னச்சிவப்பும் ஒரு புகைப்படம் போல இப்பாடலில் உறைந்திருப்பதாய்த் தோன்றும். 

முதலில் பாடலைப் படித்து விடுங்கள்..

ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு 
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் 

'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் 5

புல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா!
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா 

செய்வது நன்று ஆமோ மற்று?'
சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று 10

உண்பவோ, நீர் உண்பவர்?
செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா? 

'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று; 15
'அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி, 

கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு.


-கலித்தொகை 62,  கபிலர், குறிஞ்சி திணை 26, 

விளக்கம் :

பெண் :
”ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்”


 ஏய்... இவன் ஒருத்தன்.. வெட்கமில்லாதவன்.. தன் மேல் விருப்பமில்லை என்று சொல்பவளையும் வலிந்து கைப்பற்ற நினைக்கிறானே?

ஆண் : 'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான்
புல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா!

விருப்பம், விருப்பமின்மை பற்றியெல்லாம் நீ தெரிந்து வைத்துக் கொள். எனக்கு அது பற்றியெல்லாம் அறியத் தேவையில்லை. பூக்கள் பூத்த மெல்லிய கொடி போன்றவளே.. உன்னைத் தழுவுவது எனக்கு இன்பமாய் இருப்பதால் தழுவினேன்.

பெண் : “
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று?' ”

நமக்கு இன்பமாக இருக்கிறது என்பதற்காக வலிந்து மற்றவர்க்கு துன்பம் விளைவிப்பது நல்லதா?

 
ஆண் : சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்!
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று
உண்பவோ, நீர் உண்பவர்?
செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?
'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று”

சுடர் போன்று மின்னும் வளையல் அணிந்தவளே! உன் பேரறிவை ஒதுக்கி வைத்து விட்டு நான் சொல்வதைக் கேள். தாகத்திலிருப்பவர்கள் தமக்கு இனிமையாக இருக்கிறது என்றுதான் நீர் அருந்துவார்களே தவிர நீருக்கு இனிதாக இருக்கட்டும் என்றா அருந்துவார்கள்? நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை.. என்ன செய்வேன் நான்? ஐந்து தலைப் பாம்பின் வாயில் மாட்டிக் கொண்டு நைபவன் போலிருக்கிறேன். குறையில்லாத நிலவைப் போல அழகு முகமுடைய பெண்களை, வலுவில் கவர்ந்து கொள்ளுதலும் கூட அறம் தான் தெரியுமா?

பெண் : (தனக்குள்ளேயே)  ”
அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,
கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு.”

இதுவும் அறம் தானோ? அதோடு இவன் நாம் சொல்வதைக் கேட்க மாட்டான். நம்மையே நினைத்து தன்னை வருத்திக் கொள்வான். முற்பிறவியிலும் கூட நாமும் அவனும் வேறல்ல என்றே தோன்றுவதால் அவனுக்கு மறுப்புச் சொல்ல நமக்கேதும் காரணம் இருக்கிறதா மனமே?
 

அப்பா! எத்தனை நளினமிக்க நாடகம் இது. எந்தப் பெண்ணும் அறிமுகமில்லாத ஒருவன் திடீரென்று கட்டிப்பிடித்தவுடன் அவனை காதலித்துவிடப் போவதில்லை. அவன் “இதுவும் அறம் தான்” என்று சொன்னவுடன் “அப்படித்தான் போல” என்று அப்பாவியாய் நம்பி விடப் போவதில்லை. நம்பிய கணத்திலேயே  காலம் காலமாய் ஒன்றாய் வாழ்ந்த உணர்வோடு மனம் ஒன்றி விடப் போவதில்லை. அப்படியானால் இந்தக் கவிதையின் மெல்லிய மாயத்திரைக்குப் பின்னால் ஒளிந்திருப்பது எது? 

அவன் எத்தனை நாட்களாய் அவளைப் பின் தொடர்ந்தானோ?  அனுப்பிய தூதுகள் எத்தனையோ? அவர்களுக்குள் எத்தனை ரகசிய பார்வைப் பரிமாற்றங்களோ?  ஒரு கடைவிழிப் பார்வையின் மூலமாகவோ இதழோரம் பூத்து உதிராமல் காத்த புன்னகையின் வாயிலாகவோ அவள் சம்மதம் சொன்ன கணம் எதுவோ? எதையும் இந்தப் பாடல் சொல்லவில்லை... ஆனால் சொல்லாமலேயே பலவற்றை உணர வைக்கிறது. பேருந்தின்  ஜன்னல் வழியே எவருமறியாமல் வானம் நோக்கிப் புன்னகைத்துக் கொள்ளும் பெண்ணைப் போல, மெளனத்தைச் சுமந்திருக்கும்  இசை போல,  ஆயிரம் கதவுகளுக்குப் பொருந்தும் ஒற்றைச் சாவி போல, காட்டைப் பொதிந்திருக்கும் விதை போல பரிமளிக்கும் இக்கவிதை, எப்போதும் நாடகத்தின் இறுதிக் காட்சியின் போது அரங்கிற்குள் நுழையும் உணர்வையே தருகிறது.

வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று
உண்பவோ, நீர் உண்பவர்?

என்ற வரிகளுக்கு விளக்கம் எழுதுகையில் பொருளை மீறி வார்த்தைகள் எஞ்சி விடாமலிருக்க மிகுந்த பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. எத்தனை செறிவான சொற்களை, உவமைகளை அநாயசமாகக் கையாண்டிருக்கிறார்கள் இந்தப் புலவர்கள்! ஆனால் இந்தக் கட்டுரையை முடிக்கும் தறுவாயில், மொத்தம் 15 வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் இச்சேதியை வெறும் ஒன்னரை வரிகளில் சொல்லிச் சென்ற மனிதரின் நினைவு வருகிறது.

“செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு”

கோபமற்ற ஏச்சுக்களும் பகைத்துக் கொண்டவர் போன்ற பார்வையும் விரும்பாதவர் போன்று நடித்துக் கொண்டே உள்ளூர விரும்பிக் கொண்டிருப்பவர்களின் காதலுக்கான அறிகுறிகள் என்கிறார். காய்ச்சிக் குறுக்கிய பாலை மேலும் சுண்டியது போல மேற்சொன்ன கவிதை இந்தக் குறளில் வாமனாவதாரம் எடுத்திருக்கிறது!

பிரமிப்பாயிருக்கிறது.. மொழியின் அடுக்குகளும், சார்ந்ததன் வண்ணமாகும் சொற்களின் சித்து விளையாட்டுக்களும் மீளா வியப்பிலாழ்த்துகின்றன. வார்த்தைகளையும் அர்த்தங்களையும் ஒரு குடுவையிலிட்டுக் குலுக்கினால் உணர்ச்சிகள் எப்படி வீழ்படிவாகின்றன? இலக்கியங்கள் கனவுகளை ஒத்தவை. அதிகாலையில் கண்ட கனவு பிற்பகலில் காட்சி மாறாமல் பலிப்பதை உணர்ந்தவன் எத்தகைய அதிர்வு கொள்வானோ அத்தகைய அதிர்வுகளை தொடர்ந்து வாசக நரம்புகளில் மீட்டிக் கொண்டே இருக்கின்றன. அதைத்தான் நாம் வாசிப்பின்பம் என்றும், ஒத்திசைவு என்றும் சில நேரங்களில் வாழ்க்கை என்றும் சொல்கிறோம்.


செவ்வாய், 3 ஏப்ரல், 2012

நல்கார் நயவாராயினும்...

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.(குறுந்தொகை 60)

பொருள் : சிறிய கூதளச்செடிகள் ஆடும் பெரும் மலை. அங்கு ஒரு பெரிய தேனடையை கண்ட காலில்லாத முடவன், தன் உள்ளங்கையை சிறுகுடைபோல குவித்து (சிறுகுடைக்கு தேனெடுக்கும் கூடை என்றும் பொருள் உண்டாம்) தேனடையை நோக்கி சுட்டி கையினை நக்குவது போல... என் காதலர் என்னை நினைக்கவோ விரும்பவோ செய்யவில்லையெனினும், அவரை பலமுறை கண்டுகொண்டிருப்பதே கூட என் உள்ளத்துக்கு இனியதே.....
***********

 ஜெயமோகனின் குறுந்தொகை குறித்த உரையினை சமீபத்தில் கேட்டேன் [http://www.youtube.com/watch?v=0S-GyhYoA6Q]. பிரமாதமான உரை. அந்த உரையில் பழங்கவிதைகளை வாசிக்க நமக்கு இரண்டு மரபுகள் உண்டு என்கிறார் ஜெ. அசை பிரித்து வாசித்தல், அசை போட்டு வாசித்தல். அசை பிரித்தல் என்பது ஒரு அளவிற்கு இயந்திரத்தனமான வாசிப்பு. கவிதையின் மொழியை, அதை சூழ்ந்திருக்கும் திணை, துறை போன்ற இலக்கண கருவிகளை மட்டும் கொண்டு கவிதையை அணுகுதல். அசை போட்டு வாசித்தல் என்பது கவிதையை வாழ்வினையும் கொண்டு அணுகுதல்... அந்த உரையில் ஜெமோ சொன்ன இன்னொரு கருத்து, சங்க கால கவிஞர்கள் நம்மை விடவும் இயற்கைக்கு இன்னும் அருகில் நின்று எழுதியவர்கள். அதனால் நம் பூக்களையும் மரங்களையும் பறவைகளையும் புரிந்துகொள்ளாமல் கவிதையை முழுவது புரிந்துகொள்ள முடியாது...


***********



 காலை நேசன் இந்த குறுந்தொகை பாடலை கூகுள் ப்ளஸில் பகிர்ந்த போது இதை குறித்து அசை போடலாமா என்று தோன்றியது. இப்பாடலில் வரும் கூதளச்செடியினை பற்றி தேடிய பொழுது இதன் அறிவியல் பெயர் convovulus arvensis என்று தெரிந்தது... அதன் புகைப்படம் : ஆக கூதளச்செடி என்பது வெள்ளை பூக்களை உடைய சிறிய செடி. மலைமுழுதும் இதன் பூக்கள் நிரம்பி மலையே வெள்ளையாக தோன்றும் சித்திரம் உருவாகிறது மனதில்...கூதள் ஆடிய நெடுவரை... மலையே சன்னமாக ஆடுவது போல... பூக்களால் வெள்ளையாய் தோன்றும் மலையில் பெருந்தேனடை தனியாக தெரிகிறது. முடவன் அத்தேனடை இருக்கும் மரத்தின் மீதென்ன அம்மரமிருக்கும் மலையின் மீதுமே ஏற முடியாது... அவன் செய்யக்கூடியதெல்லாம் மலையடிவாரத்தில் இருந்தபடி எட்டா உயரத்தில் சிறு புள்ளியாய் தோன்றும் தேனடையை கையினால் சுட்டி நக்குவது மட்டும் தான். அடையவே முடியாத, காதலிக்கும் இவளது இருப்பையே கூட அறிந்துகொள்ளாத உயரத்தில் நிற்கும் ”நல்குதலும் நயவுதலும்” செய்யா ஒரு ஆளுமையை நோக்கிய காதல் என்பதன் வலி இது.... மரத்தை அல்ல... மரம் இருக்கும் மலையையும் நெருங்கவியலாத முடக்காதல்....

இங்கு ஆண்டாள் நினைவுக்கு வருகிறாள். ஆண்டாளின் கதைக்கு “அரங்கன்” வந்து அவளை ஏற்றுக்கொண்டான் என்பது எத்தனை நாடகத்தனமான முடிவு! கிரேக்க நாடகவியலில் Deux ex machina என்ற கருத்தாக்கம் ஒன்று உண்டு. தோராயமாக “கருவியிலிருந்து கடவுள்” என்று மொழிபெயர்க்கலாம். ஒரு நாடகத்தில் தீர்வே இல்லாத சிக்கல்கள் உருவாகும் பொழுது Crane போன்ற கருவியின் மூலம் “கடவுளர்கள்” மேடைக்கு கொண்டுவரப்படுவர். அவர்கள் ட்ரொய்ங்ங்ங் என்று ஒரு கையசைவில் அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிடுவார்கள்...ஆண்டாள் அரங்கனை சேருவதும் இப்படியான ஒரு deux ex machina தான்.

ஆண்டாள் தன் பாவனைகளை உண்மையென நம்பியவள். மற்ற ஆழ்வார்களுக்கும் ஆண்டாளுக்குமான வேறுபாடு அது தான் என்று படுகிறது. பெரியாழ்வாருக்கும் நம்மாழ்வாருக்கும் கண்ணனின் தாயாவதும் காதலியாவதும் காதலியின் தாயாய் நின்று கண்ணனை பழிப்பதும் எல்லாமே ஒரு பாவனை தான். அவர்கள் வாழ்விற்கும் இந்த பாவனைக்குமான வேறுபாட்டினை அறிந்தே இருந்தனர். ஆனால் ஆண்டாள் அந்த கோட்டை தாண்டி, பாவனையே அவள் என்ற நிலைக்கு சென்றுவிட்டவள்.

ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

என்கிறாள்...பாவனையே வாழ்வான நிலை... இந்நிலையில் ”கடவுள்” இறங்கி வராவிட்டால் அவள் நிலை என்ன?

புராணம் வரலாற்றை போல கொடுமையானது அல்ல. அது கருணை நிறைந்தது... கடவுளை கொணர்ந்து அவளை காப்பாற்றிவிட்டது. நாச்சியார் திருமொழி முழுதுமே கற்பனையெனும் நெடுவரையின் மேல் நின்ற அரங்கனை நோக்கி ஆண்டாள் செய்த ”சுட்டுபு நக்குதல்” தான் என்ற எண்ணம் தோன்றிவிட்டால் அப்பாடல்களின் கொண்டாட்டங்கலெல்லாம் மறைந்து ஒரு சோக இருள் படிந்துவிடுகிறது அதன் வரிகளில்.... 

வியாழன், 30 ஜூன், 2011

பூத்தலைச் சிறுகோல்




முதன் முதலாய் சித்தார்த்தைப் பற்றிய விபரங்களைச் சொல்லி, அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அம்மாவிடம் சொன்ன தருணத்தை, மடியில் உறங்கும் மகளுக்கு வாஞ்சையாய் தலைகோதி விட்டபடியே யோசித்துக் கொண்டிருந்தேன். அன்று எவ்வித தயக்கமுமின்றி வெகு எளிதாய் அம்மாவிடம் இறக்கி வைக்க முடிந்த அச்செய்திக்கு இப்போது ஏராளமாய் கனமேறி விட்டாற் போல் இருக்கிறது. மகளாய் இருந்த போது உணராத பலவற்றை தாய்மை மெதுவாக உணர்த்திக் கொண்டிருக்கிறது.  என் அம்மா எனக்குத் தந்திருந்த சுதந்திரம் முழுவதையும் நான் இவளுக்குத் தருவேனா என்பதில் இன்னமும் பெருத்த சந்தேகங்களுடன் தான் இருக்கிறேன்!

அன்று அம்மாவிடம் பெரிதாக எந்த சலனமும் இல்லை. ஆனால் இப்போது யோசித்தால் அன்றிரவு அவர்கள் நிம்மதியாகத் தூங்கியிருப்பார்கள் என்று தோன்றவில்லை. சிறு வயதில், பூக்கள் விரிவதை நேரில் பார்த்தே ஆக வேண்டுமென்று ஆசையிருந்தது. மல்லிகை மொக்குகளைப் பறித்துக் கொண்டு வந்து வைத்து  கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். பார்த்திருக்கப் பார்த்திருக்க அவை திடுமென மலர்ந்திருக்குமேயன்றி ஒருமுறை கூட அவை இதழிதழாய் மலர்வதைப் பார்க்க முடிந்ததில்லை. சிற்றாடைகளிலிருந்து தாவணிக்கும் புடவைக்கும் ஏற்ற வயதினளாய் மகள் மாறிக் கொண்டிருப்பதை தினமும் பார்த்து ரசித்துக் கொண்டேயிருந்தாலும் அவளின் மலர்ச்சியைத் திடீரென தாய் உணர்ந்து கொள்வது, அவளின் காதலை அறிந்து கொள்ளும் தருணமாகத் தான் இருக்கக் கூடும்.  

சங்க இலக்கியங்கள்  இப்படி எத்தனையெத்தனை விதமான அன்னையரைக் காட்சிப்படுத்துகின்றன!  மகளிடம் சிறு மாற்றம் கண்டாலும் யாரையேனும் காதலிக்கிறாளோ என்று சந்தேகத்தில் கலங்கும் தாய்மார்கள்,  காதலால் உடல் மெலியும் மகளை, குழந்தையாகவே பாவித்து அவள் உடல் நோயால் மெலிவதாகப் புலம்பும் தாயர்கள், காதலனோடு சென்று விட்டவளை வீதிகளில் பொங்கி வழியும் ஜனத்திரளினூடாய் கண் சலிக்கத் தேடித் தவிக்கும் அம்மாக்கள், "என் மகள் அறியாச் சிறுமி, அழைத்துச் சென்றவன் தான் கொடியவன்" என்றே நம்பிக் கொண்டிருக்கும் வெகுளிப் பெண்கள், மகள் விட்டுச் சென்ற பொருட்களைத் தொட்டுத் தொட்டு 'இது  என் பெண் விளையாடிய பொம்மை, இது அவள் பேசிக் கொஞ்சிய கிள்ளை'  என்று சொல்லிச் சொல்லி எஞ்சிய அனைத்திலும் அவளையே காண முயலும் பித்து மனங்கள்.... 

அம்மாவின் அப்போதைய கனத்த மெளனம், இன்று யோசிக்க யோசிக்க "வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்" என்னும் கலித்தொகை வரியை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியது. மனம் அவ்வரியை விடாது ஜபித்துக் கொண்டேயிருக்கிறது. மகள் காதலிக்கிறாள் எனத் தெரிய வரும்போது அது பற்றி சினவாமல் இருப்பது கூட சாத்தியம் தான்... 'வினவலும் செய்யாள்'  என்பது அத்தனை வருடங்களுக்கு முந்தைய சமூகத்தில் சாத்தியம் தானா?  பாடலைத் தருகிறேன்.. படித்துப் பாருங்கள்.


தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு,
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! 5
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,
அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ;
அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள், 10
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என்
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,
பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா! 15
ஈங்கு எவன் அஞ்சுவது;
அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்
வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், 20
அல்கலும் சூழ்ந்த வினை.' 

காதலனைப் பார்க்கச் சென்ற பெண்ணொருத்தி அவன் சூடியிருந்த முல்லைப் பூக்களை வாங்கி ஆசையாய் சூடிக் கொள்கிறாள். வீட்டிற்குத் திரும்புகையில் அதனை தன் கூந்தலுக்குள் ஒளித்துக் கொள்கிறாள். அவளின் கூந்தலை வெண்ணெய் பூசி வாருவதற்காக அவிழ்த்த அவள் அன்னை, கீழே விழுந்த முல்லைப்பூவைக் கண்டு திடுக்கிட்டுப் போகிறாள். எனினும், அந்த அசாதாரண சூழலை மெளனத்தால் எதிர்கொள்கிறாள் அவ்வன்னை. ஏதும் வினவாமலும் அது பற்றி சினம் காட்டாமலும் அவ்விடத்தை விட்டு நீங்குகிறாள். தன் காதல் வெளிப்பட்டு விட்ட அச்சத்தை அப்பெண் தன் தோழியிடம் பகிர்ந்து கொள்கையில் "உன் பெற்றோர் அவனுக்கே உன்னை திருமணம் செய்விப்பார்கள், பயப்படாதே"  என்று அவள் ஆறுதல் கூறுவதாக அமைகிறது இப்பாடல். கீழே பத்தி பிரித்து எளிய விளக்கம் கொடுத்திருக்கிறேன்.


தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு, 
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்

தோழி! கள் அருந்தியவன் நாணம் மறந்து தானே சென்று எல்லா உண்மைகளையும் உளறி விடுவதைப் போல (நல்ல உவமை!) நான் மறைத்து வைத்திருந்த விஷயத்தை நானே காட்டிக் கொடுத்து கையும் களவுமாக பிடிபட்டேன் தெரியுமா?

புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர் 
முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! 5
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்

கால்நடைகளை மேய்க்கும் இடையர் குலத்தவனான என் காதலன் ஓர் சிறு முல்லைச் சரத்தைச் சூடி வந்தான். அதனை நான் என் கூந்தலுக்குள் ஒளித்து முடிந்து கொண்டேன்.
 
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே, 
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண, 
அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ; 

வெண்ணெய் பூசுவதற்காக அன்னை என் கூந்தலை விரித்த போது அவள் முன்னால் கீழே வீழ்ந்தது அப்பூ.

அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள், 10
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு, 
நீங்கிப் புறங்கடைப் போயினாள்;

அவள் அது பற்றி என்னைக் கேட்கவும் இல்லை. கோபம் கொள்ளவுமில்லை. நெருப்பைத் தொட்டவரைப் போல கை உதறி என்னை விட்டு விலகி அப்பால் சென்று விட்டாள்.

யானும், என் 
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த 
பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி, 
பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.

நானும் என்னுடைய கூந்தலை முடிந்து கொண்டு அருகிலிருந்த சோலைக்குள் சென்று ஒளிந்து கொண்டேன். 

' 'அதற்கு, எல்லா! 15
ஈங்கு எவன் அஞ்சுவது; 
அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும் 
அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண் 
வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில் 
வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், 20
அல்கலும் சூழ்ந்த வினை.' 


அடியே! இதற்காக ஏன் அச்சப்படுகிறாய்? பயப்படாதே. நீ அவன் சூடிய பூவைச் சூடியதால் உன் விருப்பத்தை நம் வீட்டவர் உணர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களே உன்னை அவனுக்கு மணம் முடித்து வைப்பர். நிச்சயம் அதுவே நடக்கும். 


இத்தோழி சொன்னாற் போல பின்னாளில் அவர்களே முன்னின்று தன் மகள் விரும்பியவனுக்கே அவளை மணம் முடித்து வைத்திருக்கலாம். சிறு வயதிலிருந்து மகள் விரும்பிக் கை நீட்டியதையெல்லாம் மறுக்காமல் பெற்றுத் தந்த அவ்வன்னையின் அருமுயற்சி அத்திருமணத்தைக் கை கூடச் செய்திருக்கலாம். நடந்தது எதுவாயிருப்பினும், தோழிக்கும் தலைவிக்குமான உரையாடலாய் காட்சியளிக்கும் இப்பாடலின் சுட்டு விரல், 'வினவவும் செய்யாது சினக்கவும் செய்யாது' மெளனமாய் விலகிப் போன தாயின் மனமுதிர்வையே மீண்டும் மீண்டும் சுட்டி நிற்பதாய் தோன்றுகிறதெனக்கு. 

பின்குறிப்பு: கட்டுரையின் தலைப்பு மற்றுமோர் சங்கப்பாடலில் இடம் பெறும் வரியாகும் . மகளை போலியாய் மிரட்டி அடிக்க முற்படும் தாயொருத்தி மகளுக்கு வலிக்காமல் இருப்பதற்காக நுனியில் பூக்களைக் கொண்ட சிறு கிளையை ஒடித்து வைத்திருப்பதை "பூத்தலைச் சிறுகோல்" என்று குறுகத் தரித்த கவிச்சொல்லாக்கி அன்னையின் பரிவை அழகாய்ப் புலப்படுத்தியிருப்பதால் எங்களுக்கு மிகப் பிடித்த வரி.

திங்கள், 22 மார்ச், 2010

கூடடையும் தருணம்



காதலின் எல்லா சாத்தியங்களையும் பாடுபொருளாக்கிக் கொண்டிருக்கும் சங்க இலக்கியக் கவிதைகள் வாசிக்குந்தோறும் வியப்பிலாழ்த்துகின்றன.  நவீன யுகக் கவிதைகள் தொட்டும் கூடப் பார்த்திராத மனதின் நுண்ணிய ஊற்றுக் கண்களை வெகு எளிதாய்ப் பீறிட்டெழச் செய்யும் இக்கவிதைகளின் இயல்பை என்னவென்று சொல்ல? தமிழின் நீண்ட நெடும் பயணத்தில், வழி நெடுகையிலும் தவறி விழுந்து விட்ட சொற்களின் தொகுப்புகளாய் காட்சியளிப்பதைத் தவிர்த்து இவற்றின் பிழை வேறொன்றுமில்லை என்றே தோன்றுகிறது. 

இன்று சராசரியாய் நாளொன்றுக்கு  எழுதப்படும் ஆயிரத்து சொச்சம் சமகால காதல் கவிதைகளில், காதலுக்காக, காதலிக்காக உருகி மறுகும் கவிதைகள் எதுவும் ஏன் மனைவியைப் பற்றியோ இனிய குடும்பத்தைப் பற்றியோ  பேசுவதில்லை? பணி நிமித்தம் மனைவியைக் குழந்தைகளைப் பிரிந்து வெகு தொலைவில் வாழ்பவர்கள், அவர்கள் வரவிற்காக காத்திருக்கும் மனைவியர்கள் இவர்களைப் பற்றிய அவதானிப்புகள் ஏதும் தற்கால கவிதைகளில் இருக்கிறதா என்ன? 

"ஒருநாள் எழுநாள் போற்செல்லும் சேட்சென்றார்
வருநாள் வைத்தேங்கு பவர்க்கு"

என்ற குறளின் முழு அடர்த்தியும் விரிவும் தனித்து இங்கு வசிக்கும் காலங்களில் மட்டுமே முழுதாய்ப் புலப்படுகிறதெனக்கு.

இன்றைய வாசிப்பில் மிகவும் ஆச்சரியப்படுத்திய அகநானூற்றுக் கவிதை இது. உணர்ச்சிகளையும், அவை பொங்கித் ததும்பும் தருணங்களையும் மிகத் துல்லியமாய் வார்த்தைகளில் நகலெடுக்கும் இக்கரத்தை கண்களில் ஒற்றிக் கொண்டாலென்ன?

"கொல்லினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச்
செப்படர் அன்ன செங்குழை அகந்தோறு
இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய்
உழுதுகாண் துளைய வாகி ஆர்கழல்பு
ஆலி வானிற் காலொடு பாரித்
துப்பின் அன்ன செங்கோட்டு இயவின் 
நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும்


அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்க் 
கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடுமாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்றுபின் ஒழியப் போகி உரந்துரந்து
ஞாயிறுபடினும் ஊர் சேய்த்து எனாது
துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின் 


எம்மினும் விரைந்துவல் ஏய்திப் பன்மாண்
ஓங்கிய நல் இல் ஒருசிறை நிலைஇ
பாங்கர்ப் பல்லி படுதோறும் பரவி
கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி


கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகி
பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பில்லாள் நுதல்
அந்தீங் கிளவிக் குறுமகள்
மென் தோள் பெறநசைஇச் சென்ற என் நெஞ்சே"

- கல்லாடனார் 

வாசிப்பின் போது குறுந்தொகையும், ஐங்குறுநூறும் தோற்றுவிக்காத சிரமங்கள் சில அகநானூற்றில் உண்டு. அடி விரிவும் மிக நீண்ட வர்ணனைகளும் சில நேரங்களில் சலிப்பேற்படுத்துவதுண்டு. இதை மனதில் வைத்தே அடிகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறேன். 

தொலைத்தொடர்பு வசதிகள் ஏதும் தோன்றியிராத காலத்தில், மனைவியை பணி நிமித்தமாக வெகுநாட்கள் பிரிந்திருந்த கணவன் பணி முடிந்து தனது தேரில் ஊர் திரும்புகையில் தனக்குத் தானே சொல்லிக் கொள்வதாய் விரிகிறது இந்தக் கவிதை. பாடலின் முதல் பத்தி, அவன் வரும் வழியில் மலர்ந்திருக்கும் பூக்களையும், இரண்டாம் பத்தி கடக்கும் சிற்றூரையும் மலைகளையும் விவரிக்கிறது. மூன்று மற்றும் நான்காம் பத்திகள் அவன் வரவிற்காக காத்திருக்கும் அவன் மனைவியையும் அவள் மீதான அவனது அன்பினையும் விவரிக்கிறது. 

இப்பாடலில் சொல்லப்படும் இருப்பை மரம் எதுவென்று தெரியவில்லை. செப்புத் தகடு போல சிவந்த தளிர்களையும், நெய்யை ஒத்த தேனுடன் விளங்கும் பூக்களையும் கொண்ட மரம் என்று சொல்லப்படுகிறது. அப்பூக்கள், வீசும் காற்றில் சிதறி ஆலங்கட்டி மழை போல, சிவந்த பாறைகளின் மீது உதிர்ந்து கிடக்கின்றது என்பதாக அவன் வரும் வழி காட்சிப்படுத்தப்படுகிறது.

அத்தகைய மரங்கள் நிறைந்த சிற்றூரில் பெண்கள் உலக்கை கொண்டு உரலில் குத்தும் போது எழும் ஓசையும் மலைகளில் வாழும் ஆந்தைகள் எழுப்பும் ஓசையும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆந்தைகளின் குரல் ஒலிக்கத் தொடங்குவதால் பகல் மறைந்து இரவு தொடங்கும் நேரம். அத்தகைய ஊர்களையும் குன்றுகளையும் விரைவாக பின்னுக்குத் தள்ளியபடி அவன் தேர் விரைந்து கொண்டிருக்கிறது. 

"ஞாயிறுபடினும் ஊர்சேய்த்து எனாது
துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்
எம்மினும் விரைந்துவல் எய்திப்…"

சூரியன் மறைந்து விட்ட போதும், ஊர் வெகு தொலைவிலிருக்கிறதே என்று அஞ்சாமல், உறக்கத்தை உதறி குதிரைகளை விரைந்து செலுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் நெஞ்சம் என்னை விடவும் விரைவாக முன்னே செல்கிறது.

"…………. பன்மாண்
ஓங்கிய நல் இல் ஒருசிறை நிலைஇ
பாங்கர்ப் பல்லி படுதோறும் பரவி
கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி"

சென்று, பல வகைச் சிறப்புக்களுடன் ஓங்கி உயர்ந்து விளங்கும் நல்ல வீடு ஒன்றின் ஒரு பக்கத்தில் நின்று, பல்லிகளின் குரல் ஒலிக்கும் போதெல்லாம் நான் வரும் நாள் குறித்த சகுனத்தை அது சொல்வதாக எண்ணிக் கொண்டு, கன்றுகள் வீடு திரும்புகின்ற மாலையில் தனித்து நிற்பவளை அடைந்து…

''கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகி
பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ''

பின்னாலிருந்து குவிந்த கரங்களால் அவள் கண்களைப் பொத்தியும், நீண்ட அவள் கூந்தல் படர்ந்திருக்கும் பின்னகத்தைத் தீண்டியும், அவளை அணைத்தபடி, வளையல்கள் அணிந்த கரங்களோடு தன் கரங்களைப் பிணைத்துக் கொண்டு தழுவவும் தொடங்கி விட்டது,


"நாணொடு மிடைந்த கற்பில்லாள் நுதல்
அந்தீங் கிளவிக் குறுமகள்
மென் தோள் பெறநசைஇச் சென்ற என் நெஞ்சே"


நாணமும் கற்பும் மிகுந்த, அழகிய நெற்றியையும், இனிய குரலையும் உடைய இளையவளான என் மனைவியின் மெல்லிய தோள்களைப் பெற விரும்பிய என் நெஞ்சு என்கிறான். 

இதற்கு மேலும் இதை விரித்து விரித்து நீர்க்கச் செய்ய மனமில்லை எனக்கு. கவிதையின் ஆன்மாவை உணர்ந்து கொண்டவர்கள் எவரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.