மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.
-ஔவையார் (குறுந்தொகை 28 - பாலை - தலைவி கூற்று )
முட்டுவேனா? தாக்குவேனா? தெரியவில்லை
நானுமோர் தன்மை மிகுந்து ஆ அ ஓ என அலறுவேனா?
மெல்லிய காற்று கூட அலைக்கழிக்கும் அளவிற்கு என்னை
துக்கம் நோயாக பீடித்திருப்பதை
அறியாது உறங்கும் இந்த ஊரை என்ன செய்வேன்?

ஜார்ஜ் எல். ஹார்ட்டுடனான பேட்டி ஒன்றில் (அ. முத்துலிங்கம் எடுத்தது என நினைக்கிறேன்), இந்த பாடலைப் பற்றி பேச்சு வந்தது. பேட்டியாளர் இந்த பாடல் விரகதாபத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் காமத்தின் வெளிப்பாடே என்றார் (உண்மையில் இன்னும் கீழிறங்கி, ஒரு பெண் சுய இன்பம் கொள்வதன் விவரிப்பே இப்பாடல் என்றார்). ஹார்ட் என்ன பதிலளித்தார் என நினைவில் இல்லை. இது ஒரு வாசிப்பு.
இப்பாடலை காமத்தின் வெளிப்பாடாக காண்பது சரியா தவறா என்ற கேள்விக்கு எந்த பொருளும் இல்லை. அந்த வாசிப்பிற்கான சாத்தியங்களும் இந்த பாடலில் உள்ளன என்பது உண்மையே.
இந்தப் பாடலை சுற்றியுள்ள தகவல்களை எடுத்துக்கொள்வோம். பாலை நிலப்பாடல் இது. பாலை பிரிவிற்கான நிலம். ஆக இந்த பாடல் ஓர் பிரிவை பேசுகிறது. தலைவி கூற்றாக வரும் பாடல் இது. தலைவனின் பிரிவு துயர் தாளாத தலைவின் புலம்பல். இந்த புலம்பல் உடல் சார்ந்த வெளிப்பாடாக வருகிறது பாடலில் : முட்டுதல், தாக்குதல் என. இந்த புள்ளியிலிருந்து காமத்தை சென்றடைவது வெகு இயல்பான ஒரு வாசிப்பே....
ஆனால் எனக்கு இந்த பாடல் ஒரு தற்காலிக பிரிவை மட்டும் சொல்வதாக படவில்லை. அதனினும் ஆழமாக ஓர் பிரிவின் ஆற்றாமை தெரிகிறது அதில். இதோ இந்த வாரம் ஆழிப்பேரலையின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் வந்து போனது. தொலைகாட்சி செய்தியில் ஒரு காட்சியை காண்பித்தார்கள். ஆழிப்பேரலை அடித்து ஓய்ந்த மறுதினம் எடுக்கப்பட்ட காட்சி. ஓர் அறையில் பிணங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடக்கின்றன. மெலிந்து காணப்பட்ட ஒரு பெண் அந்த அறையை சுற்றி சுற்றி வருகிறாள். அவளது கைகள் மார்பை அறைந்தபடி உள்ளன. ஐயோ ஐயோ என்ற கதறல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இன்று இந்த பாடலை படித்த பொழுது அந்த ஐயோ என்ற கதறல் அதே வீச்சுடன் ஒலித்து கனமேற்றுகிறது மனதை. இறந்தது யார் என நமக்கு தெரியாது. அவளது கணவனாக இருக்கலாம். மகனோ மகளோவாக இருக்கலாம். அல்லது இவர்கள் அனைவருமாக.
அன்றிரவு அந்த பெண் எங்கிருந்திருப்பாள்? என்ன நினைத்திருப்பாள்? அவளும் இப்படித்தானே ஆற்றாமையில் சென்று முட்டியிருப்பாள்? அவளது துயரறியாது உறங்கும் இந்த உலகே பகையாக தோன்றியிருக்காதா அவளுக்கு?
பிரிவு ஓர் இரவு மிருகம். அது தனது ஆதிக்கம் முழுவதையும் மகா வீரியத்தோடு செலுத்திக் கொண்டிருக்கும் வரையில் முடிவின்றி நீளும் உறக்கமற்ற இரவுகளும், விடியலுக்கான காத்திருப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும் போலும்.